வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் !
தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: தமிழகத்தில் விவசாயிகள் யாரும் வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தமிழ்நாடு பொதுநல வழக்குக்கான மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தவறியது ஏன் என்று தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் அதற்கு பதிலளித்து தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. உடல்நலக்குறைவு, வயது முதிர்வு, மாரடைப்பு போன்ற காரணங்களால் மரணம் அடைந்துள்ளார்கள். 30 பேர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துள்ளார்கள்.
மரணம் அடைந்த 82 விவசாயிகள் குடும்பத்துக்கும் மனிதாபிமான உணர்வோடு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தேசிய விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ரூ.623 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.