பெங்களூரில் பாலியல் தொழில்.. தமிழக அமைச்சரின் உதவியாளர் கைது
பெங்களூர்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறி, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டியின் நேர்முக உதவியாளர் சத்யா என்கிற சத்தியநாராயணா உள்பட 11 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் பாகலூர் ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் சத்யா என்ற சத்தியநாராயணா (42). தமிழக கால்நடை துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் உதவியாளராக இருந்து வருகிறார். இவர், கர்நாடகாவில் உள்ள நண்பர்கள் சிலர் உதவியுடன், பெங்களூருவில் பானசவாடி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பால்ஜி கவுடா என்பவருக்கு சொந்தமான 'ஹாப்பி எண்டிங்' என்ற பெயரில் பாடி டூ பாடி மசாஜ் சென்டர் என்ற ஒரு அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பெங்களூர் போலீசார் நேற்று அங்குள்ள தங்கும் விடுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பல மாநிலங்களை சேர்ந்த பெண்களை வேலை தருவதாக கூறி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நான்கு பெண்களை மீட்டனர். அவர்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் தமிழ்நாடு கால்நடை துறை அமைச்சரின் உதவியாளர் சத்தியநாராயணா என்பவரும் ஒருவர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் 17 செல்போன்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. .