நீட் தேர்வு விவகாரம்: மத்திய அமைச்சர்களை இன்று சந்திக்கின்றனர் தமிழக அமைச்சர்கள்!
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை இன்று மீண்டும் சந்திக்கவுள்ளனர்.
டெல்லி: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை இன்று மீண்டும் சந்திக்கவுள்ளனர்.
நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகின்றனர். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழுவினர் கடந்த 20ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தனர்.
அப்போது நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்துப் பேசுவதற்காக அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 5 பேர் நேற்று டெல்லி சென்றனர்.
அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இவர்கள் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.