தமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு.. கொடி கட்டிப் பறந்த தமிழ் !
Recommended Video
டெல்லி: தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட லோக்சபா எம்பிக்கள் இன்று பதவியேற்ற நிலையில் புதுவை எம்பி வைத்திலிங்கமும் அவரை தொடர்ந்து பதவியேற்ற 38 தமிழக எம்பிக்களும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்கெனவே பிரதமராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவைக்கான முதல் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது.
பதவிப் பிரமாணம்
நேற்றும், இன்றும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.பி. வீரேந்திரகுமார், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக எம்பிக்கள்
முன்னதாக வீரேந்திரகுமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இன்றைய தினம் தமிழக எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டு வருகின்றனர்.
தமிழில் பதவியேற்பு
சோனியா காந்தி உள்ளிட்ட எம்பிக்களும் இன்றைய தினம் பதவியேற்கின்றனர். ஹிந்தி திணிப்பு குறித்து பேசி வரும் நிலையில் தமிழக எம்பிக்கள் எந்த மொழியில் பதவியேற்றுக் கொள்கின்றனர் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது.
மேஜை
அந்த வகையில் புதுவை எம்பியாக வைத்திலிங்கம் பதவியேற்றுக் கொண்ட போது கடவுள் மீது ஆணையிட்டு தமிழில் பதவியேற்றார். அப்போது சக தமிழக எம்பிக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். இதைத் தொடர்ந்து தமிழக எம்பி ஜெயக்குமார், கலாநிதி வீராச்சாமி, தமிழச்சி, தயாநிதி மாறன், டி. ஆர் பாலு, ஜி செல்வம், ஜெகத்ரட்சகன், செல்லக்குமார், செந்தில்குமார், அண்ணாதுரை, விஷ்ணு பிரசாத், கனிமொழி, சுப்பராயன், ஓபி ரவீந்திரநாத்குமார், திருநாவுக்கரசர், தொல் திருமாவளவன், ரவிக்குமார் உள்பட 38 எம்பிக்களும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.
கருணாநிதி
திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் பதவியேற்றவுடன் காந்தி, அம்பேத்கர், பெரியார், காமராஜர் வாழ்க என கூறினார். இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் பதவியேற்றுக் கொண்ட போது தமிழ் வாழ்க, வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என கூறினார்.