உ.பியில் பிச்சை எடுத்த திருநெல்வேலி முத்தையா நாடார்... ஆதாரால் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டார்!
உத்திரபிரதேசத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த வயதான முதியவர் ஒருவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கோடீஸ்வரர் முத்தையா நாடார் என்று ஆதார் அட்டையின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
லக்னோ : உத்திரபிரதேசத்தின் ரேபரேளியில் பிச்சை எடுப்பவர் என மக்களால் அறியப்பட்ட முதியவர் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த கோடீஸ்வரர் முத்தையா நாடார் என்பது தெரிய வந்துள்ளது. ஆதார் அட்டையின் மூலம் அவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது தான் இதில் ஆச்சரியமான விஷயம்.
ஆதார் அட்டையில் இருந்த விவரங்களின் அடிப்படையில் முதியவர் ஒருவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தை நேர்ந்த திதியூர் பூக்குளியைச் சேர்ந்த முத்தையா நாடார் தான் அவர் என்பது ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அவருடைய பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் ஒரு கோடியே 63 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
மொழி புரியாமல் தவித்த தமிழர்
சுவாமி ப்ரபோத் பரமஹ்ன்ஸ் கல்லூரி மாணவர் ஸ்வாமி பாஸ்கர் கடந்த டிசம்பர் 13ம் தேதி முத்தையா நாடாரை மோசமான நிலையில்அடையாளம் கண்டுள்ளார். பார்ப்பதற்கு அவர் பிச்சைக்காரர் போல காட்சியளித்திருக்கிறார். இதனையடுத்து முத்தையாவிடம் அந்த மாணவர் பேச முயற்சித்துள்ளார். ஆனால் அவருக்கு மொழி புரியவில்லை.
ஆதார் அட்டையை கண்டெடுத்த மாணவன்
எனினும் செய்கை மூலமாக தான் மிகவும் பசியுடன் இருப்பதாக முத்தையா பாஸ்கரிடம் செய்து காட்டி உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த மாணவர் அவருக்கு உணவு வாங்கித் தந்ததோடு அவருக்கு முடிதிருத்தம் செய்து, முகச்சவரம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளார். இதனையடுத்து அவர் குளிக்கச் சென்ற போது அவரிடம் இருந்த ஆதார் அட்டை மற்றும் வங்கி டெபாசிட் அட்டையை அந்த மாணவர் பார்த்துள்ளார்.
காணாமல் போனவர்
நாடார் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த மாணவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தார் ரேபரேளி சென்று முத்தையாவை விமானத்தில் அழைத்து வர புறப்பட்டுள்ளனர். கடந்த ஜுன் மாதத்தில் புனித சுற்றுலா சென்ற முத்தையா நாடார் காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
ஆதாரால் ஊர் திரும்புகிறார்
முத்தையா சுற்றுலாவின் போது கடத்தப்பட்டிருக்கலாம் என்று நினைத்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் எப்படியோ ஒரு வழியாக ஆதார் அட்டையின் மூலம் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.