காவிரி நீர் தமிழகத்துக்கு இனி கிடையாதா? மனசாட்சியுடன் சாட்டையை சுழற்றுமா உச்சநீதிமன்றம்?
காவிரி நதிநீர் வழக்கில் தமிழக மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் செயல்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
Recommended Video
சென்னை: காவிரி நதிநீர் வழக்கில் மத்திய பாஜக அரசின் இழுத்தடிப்பும் உச்சநீதிமன்றம் அதற்கு இணக்கமாக போவதும் தமிழகத்துக்கு பேரிடியாக தொடருகிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள தமிழகத்துக்கு நீதி கிடைக்க உச்சநீதிமன்றம் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு.
காவிரி நதிநீர் பிரச்சனையில் கடந்த காலங்களில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதும் கடுமை காட்டிய போதும் கர்நாடகா கண்டு கொள்ளாத நிலையே இருந்து வந்தது. தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற உத்தரவை மத்திய அரசும் மதிப்பதே இல்லை.
தமிழகத்துக்கு குடிநீருக்காவது 4 டிஎம்சி நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா கைவிரித்துவிட்டது. கர்நாடகாவில் காங்கிரஸ் அல்லது பாஜக என எந்த அரசு அமைந்தாலும் நிச்சயம் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிடமாட்டார்கள் என்பது தெளிவான ஒன்று.
இதைத் தட்டிக்கேட்க வேண்டிய மத்திய அரசு, நியாயம் வழங்க வேண்டிய மத்திய அரசும் அற்ப அரசியல் லாபங்களுக்காக தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரிய வரைவு அறிக்கையை தாக்கல் செய்யவே இத்தனை மாதங்களாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு.
கர்நாடகா மற்றும் மத்திய பாஜக அரசின் இந்த வஞ்சகத்துக்கு எதிராக தமிழகத்தின் கொந்தளிப்பு போராட்டங்களால் மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்த காவிரி நதிநீர் உரிமையை காவு கொள்ளும் இந்த அரசுகளால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்காலமே நாசமாகப் போய்விட்டது.
ஆகையால் தற்போதைய நிலையில் தமிழர்கள் உச்சநீதிமன்றத்தைத்தான் ஒரு கடவுளைப் போல எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசியல் லாபங்களுக்காக அப்போதைய காங்கிரஸ் மத்திய அரசு இவ்வளவு வஞ்சனையாக உச்சநீதிமன்றத்தில் செல்வாக்கு செலுத்தவில்லை.
அதனால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த கோரும் வழக்கில் தமிழகத்துக்கு பெரும் நீதியை உரிமையை நிலைநாட்டிக் கொடுத்தது உச்சநீதிமன்றம். அதேபோன்ற ஒரு நியாயமான நீதியைத்தான் உச்சநீதிமன்றத்திடம் தமிழகம் இப்போதும் எதிர்பார்க்கிறது.
கர்நாடகா தேர்தல்தான் முடியப் போகிறது.. வரப்போகும் மே 14 விசாரணையின் போதாவது மத்திய பாஜக அரசுக்கு கடிவாளம் போட்டு உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்த வேண்டும். அதேபோல் தமிழகத்துக்கு நீரை தரவே மாட்டோம் என்கிற கர்நாடகா அரசை வன்மையாக கண்டித்து தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத்தர வேண்டிய பெரும் பொறுப்பு உச்சநீதிமன்றத்துக்கே உண்டு.
உச்சநீதிமன்றமும் தமிழகத்தை கைவிட்டால் தமிழர்கள் காவிரி டெல்டாவை விட்டு வெளியேறி பஞ்ச பராரிகளாக அகதிகளாகத்தான் அலையும் சூழ்நிலை உருவாகும். நீதி பரிபாலனத்தை நிலைநாட்ட வேண்டிய உச்சநீதிமன்றம் எப்போது தமது மனசாட்சிப்படியான கடமையை செயல்படுத்தப் போகிறது?
தமிழகத்துக்கு ஆகக் குறைந்தபட்சம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நீரையாவது அது பெற்றுத்தர வேண்டும். அதுதான் தமிழக விவசாயிகளின் ஒற்றை கோரிக்கை. இந்திய தேசத்தில் தமிழர்கள் இப்போது நம்புவது உச்சநீதிமன்றம் ஒன்றைத்தான். இன்னமும் நம்பி காத்திருக்கிறோம் எங்களுக்கான நீதி கிடைக்கத்தான் வேண்டும்!