மரம் வெட்ட வரமாட்டோம்.. சத்தியம் வாங்கிக்கொண்டு 84 தமிழர்களை விடுவித்தது ஆந்திர போலீஸ்!
Recommended Video
திருப்பதி: ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட 84 தமிழர்களில் முதற்கட்டமாக 43 பேர் தமிழகம் புறப்பட்டுள்ளனர்.
திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்த சென்றதாக திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 84 தமிழர்களை ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
நேற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டனர். 84 தமிழர்களையும் ஆந்திர போலீசார் தங்களின் சொந்த ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.
இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட 84 தமிழர்களிடமும் இனி மரம் வெட்ட வரமாட்டோம் என எழுதி வாங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து ஆஞ்சநேயரபுரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அவர்களை அழைத்து வந்த போலீசார் இனி மரம் வெட்ட வர மாட்டோம் என உறுதி மொழி பெற்றதோடு கோவிலில் வைத்து சத்தியமும் வாங்கிக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட 84 தமிழர்களில் முதற்கட்டமாக 43 பேர் தமிழகம் புறப்பட்டனர். தமிழக அரசு பேருந்தில் 43 தமிழர்களும் முதற்கட்டமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.