சென்னையில் ஐபிஎல் நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம்... எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி!
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி எச்சரித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் மீறி நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் என்று மஜகவின் பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான தமிமுன்அன்சாரி அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியை நடத்தினால் தமிழ்நாட்டிற்கே வெட்கக்கேடு என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிமுன்அன்சாரி கூறியதாவது: நாளை தி.மு.க நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கேட்டு எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். காவிரிக்காக எல்லோருடனும் இணைந்து போராடுவது என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளோம்.
காவிரி விவகாரத்தில் அரசியல் பேதம் பார்க்கக்கூடாது. அந்த வகையில் நாளை தி.மு.க நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து நாங்கள் பங்கேற்கிறோம்.
சென்னையில் வருகின்ற 10ம் தேதி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசிற்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கொண்டிருகிறார்கள்.
குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கிரிக்கெட் போட்டி ஒரு கேடா? அப்படி நடத்தினால் அது தமிழ்நாட்டிற்கே வெட்கக்கேடு.
உடனடியாக தமிழக அரசு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும், மீறி நடத்தினால் மனிதநேய ஜனநாயக கட்சியினரும், காவேரி உரிமை மீட்பு குழுவினரும் மைதானத்திற்குள் நுழைந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம். இதை மீறி அங்கு விளையாட வரும் ஐ.பி.எல் வீரர்களை சிறைபிடிப்போம். தமிழக மக்களின் உணர்வுகளை எல்லோரும் புரிந்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.