தமிழகத்துக்கு ஒடிஷாவில் ஒரு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கியது மத்திய அரசு!
டெல்லி: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஒடிஷாவில் ஒரு நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அனல் மின்நிலையங்களின் பங்கு 35% உள்ளது. தற்போது மத்திய அரசு அனுமதியின்கீழ் ஒடிஷாவில் உள்ள டால்ச்சர், ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் ஆகிய நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை வாங்கி வருகிறது.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் பெரும் முறைகேடு நடந்ததாகக் கூறி 200-க்கும் மேற்பட்ட, தனியார் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஆணைகளை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரத்து செய்தது.
அதைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு, ஜார்க்கண்ட், ஒடிஸா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 43 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த ஏலத்தில் தமிழக மின்வாரியம், ஒடிஷாவில் உள்ள மகாநதி-மச்சகட்டா மற்றும் கரே பால்மா (2-வது செக்டர்) ஆகிய இரு நிலக்கரி சுரங்கங்களைக் கோரி மனு செய்துள்ளது.
இதனை இறுதி செய்வது தொடர்பாக டெல்லியில் மத்திய நிலக்கரித் துறை ஒரு முக்கிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. அதன் முடிவில் தமிழகத்துக்கு ஒரு நிலக்கரிச் சுரங்கம் இறுதி செய்யப்பட்டுள்ளது.