மனைவிகள் உதவியுடன் ஆசிரியையை கற்பழித்த குஜராத் மந்திரவாதி ‘மாமா சவுகான்’ கைது
சூரத்: குஜராத்தில் தனது இரு மனைவிகளின் உதவியுடன் இளம்பெண் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரோலி பகுதியை சேர்ந்த மந்திரவாதி "மாமா சவுகான்". இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், ஆசிரியையாக பணி புரிந்து வரும் இளம்பெண், தனது தந்தையைக் காணவில்லை என உதவி வேண்டி மந்திரவாதியை நாடி வந்துள்ளார்.
தன்னிடம் அதி தீவிர சக்தி உள்ளதாக அப்பெண்ணிடம் கூறிய மந்திரவாதி, தன்னுடன் பாலியல் உறவு கொண்டால் அவரது தந்தையைக் கண்டுபிடித்துத் தருவதாக நிபந்தனை விதித்துள்ளார். இதற்கு அவரது இரண்டு மனைவிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
கிட்டத்தட்ட நான்கு நாட்கள் அப்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் மந்திரவாதி. நடந்ததை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக இளம்பெண்ணை அவரது மனைவிகள் மிரட்டியுள்ளனர்.
அனைவரும் அசந்திருந்த நேரத்தில் அவர்களிடமிருந்து தப்பித்த அப்பெண், நேராக போலீசில் சென்று புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டது உறுதி செய்யப் பட்டது.
இதையடுத்து மந்திரவாதியையும், அவரது இரு மனைவிகளையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.