அசாம் முதல்வர் வாகனம் மீது போராட்டக்காரர்கள் சரமாரி கல்வீச்சு: பாதுகாப்பு வாகனங்கள் சேதம்
குவகாத்தி: அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய் பாதுகாப்பு வாகனம் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அசாம் மாநிலத்தின் உரியாம்காட் மாவட்டத்தில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட முதல்வர் தருண் கோகாய் அம்மாவட்டத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
வடகிழக்கு மாநில தீவிரவாத அமைப்புகளின் அச்சுறுத்தலால் தருண் கோகாய்க்கு இசெட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க தருண் கோகாய் சென்று கொண்டிருந்தார்.
உரியாம்காட் பகுதியின் அருக கார்கள் சென்றபோது, போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியபடி, முதல்வர் காரை நோக்கி ஓடிவந்தனர். அதில் சிலர் தங்களது கைகளில் வைத்திருந்த கற்களை தூக்கி கார்கள் மீது எறிந்தனர். இதில் பாதுகாப்பு வாகனங்களில் இரண்டின் பின்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன.
கலவரக்காரர்கள் முதல்வர் வாகனத்தை நெருங்கி வருவதை பார்த்த போலீசார் அவர்களை கலைந்து போகுமாறு எச்சரித்தனர். ஆயினும் கலவரக்காரர்கள் முன்னேறி வந்ததால், போலீசார் ரப்பர் தோட்டா பொருத்திய துப்பாக்கிகளால் கலவரக்காரர்களை சுட்டனர். தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனங்களை கொண்டுவந்து கலவரக்காரர்கள் மீது அடித்தனர். தடியடியும் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியே போர்க்களம்போல காட்சியளித்தது. இதன்பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற தருண் கோகாய் அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.