நேஷனல் ஹெரால்டு வழக்கு: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - அசாம் முதல்வர் தருண் கோகாய்
கவுகாத்தி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின விளைவு என்று அசாம் முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற ஜாமின் பெற்றனர்.
இதுபற்றி கவுகாத்தியில் அசாம் முதல்வர் தருண் கோகாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் பழிவாங்கும் செயலாக இந்த வழக்கு அமைந்துள்ளது. கம்பெனிகள் சட்டம் ஆனது ஒருவரும் ஒரு பைசா கூட பெற முடியாது என கூறியுள்ளது. அதன்பின், நிதியை தவறாக பயன்படுத்துதல் என்ற கேள்வி எழுவது எங்கே?" என அவர் கேட்டுள்ளார்.
சமீபத்தில் அமலாக்கத் துறை இயக்குநர் ராஜன் எஸ். கடோச் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி கேள்வி எழுப்பிய கோகாய், "அமலாக்க துறையினர் வழக்கு ஒன்றும் இல்லை என இதற்கு முன்பு கூறியுள்ளனர். ஆனால் அரசு அதனை மாற்றியுள்ளது. அவர்கள் ஏன் இதனை செய்தனர்?" என்று கேட்டுள்ளார்.