"மசூதிகளை இடிப்போம்" - 'வாய்க்கொழுப்பு' சு.சுவாமி அஸ்ஸாமுக்குள் நுழைய தடை: தருண் கோகய் 'வார்னிங்'
குவஹாத்தி: மசூதிகள் வெறும் கட்டிடங்கள்தான்.. அவை இடிக்கப்படலாம் என்று கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியை அஸ்ஸாமுக்குள் நுழையவிடமாட்டோம் என்று அம்மாநில முதல்வர் தருண்கோகய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி, "மசூதிகள் வெறும் கட்டிடங்கள்தான்.. ஆகையால் அவை இடிக்கப்படலாம் என கருத்து தெரிவித்திருந்தார்... அவருக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் அம்மாநில முதல்வர் தருண் கோகய் கூறியதாவது:
சுப்பிரமணியன் சாமியின் கருத்துக்கள் முற்றிலும் ஒரு சமூகத்தை இழிவுப்படுத்துவதாக உள்ளது. இது தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
இதேபோல் அவர் தொடர்ந்து பேசிவந்தால் அஸ்ஸாம் மாநிலத்துக்குள் அவர் நுழைய தடை விதிப்போம். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் அவர் மீது பா.ஜ.க. தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என வியப்பாக உள்ளது.
சுப்பிரமணியன் சாமி மீது அஸ்ஸாமின் லடாசில் போலீசில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தருண் கோகய் தெரிவித்தார்.