தெஹல்கா ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு: ஹாலிவுட் நடிகர் ராப்ர்ட் டி நிரோ வாக்குமூலம்
பானாஜி: தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் ஹாலிவுட் நடிகர் ராப்ர்ட் டி நிரோவிடம் கோவா போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கோவா நகரின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தெஹல்கா புலனாய்வு பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் பங்கேற்க ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நிரோ மற்றும் அவரது மகள் வந்திருந்தனர்.
பார்ட்டி முடிந்ததும் அவர்களை ஹோட்டலில் அவர்கள் தங்கியிருந்த அறையில் விட்டுவிட்டு வருவதற்காக தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மற்றும் அவருடன் பணியாற்றும் பெண் ஊழியர் ஆகியோர் லிப்ட்டில் சென்றனர். அப்போது பெண் ஊழியரை, தருண் தேஜ்பால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் ஊழியர் அளி்த்த புகாரை தொடர்ந்து தருண் தேஜ்பாலை கைது செய்த கோவா மாநில குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இந்தாண்டு பிப்வரி மாதம் விரைவு நீதிமன்றத்தில் தருண் தேஜ்பாலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் லிப்டில் உடனிருந்ததாக கூறப்படும் ராப்ர்ட் டி நிரோவை சாட்சியாக எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
விசாரணைக்காக தயாரிக்கப்பட்ட கேள்விகளை கடந்த ஜனவரி மாதம்
இமெயில் மூலம் அந்த நடிகருக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதற்கு தற்போது நியூயார்க்கில் இருந்து பதில் அளித்துள்ளார் ராபர்ட். அந்த பதிலில் லிப்டில் புகார் அளித்த பெண்ணும், லிப்டில் உடன் வந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் பாலியல் பலாத்காரம் நடந்ததா என்பது பற்றி ராப்ர்ட் கூறிய பதிலை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இந்த வழக்கில் ஹாலிவுட் நடிகரான ராப்ர்ட வாக்குமூலம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.