ஜனாதிபதியை சந்தித்த திருக்குறள் திறனாய்வு தேர்வு மாணவர்கள் - தருண் விஜய் ஏற்பாடு!
டெல்லி: தமிழகத்தில் நடைபெற்ற திருக்குறள் திறனாய்வுப் போட்டியில் தேர்வான மாணவர்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் நடத்தி வரும் திருவள்ளுவர் மாணவர்கள், இளைஞர் மன்றங்கள் அமைப்பு சார்பில் திருக்குறள் திறனாய்வுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் தேர்வான பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 133 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் டெல்லிக்கு வந்தனர். அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, தருண் விஜய் அறிமுகப்படுத்தினார். மாணவர்களை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார். இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சில திருக்குறளையும் அவரிடம் ஒப்புவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளுவர் மாணவர்கள், இளைஞர் மன்றங்கள் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம் சுப்ரமணியம் மற்றும் பலர் பங்கேற்றனர்.இதுகுறித்து அந்த அமைப்பின் தேசியத் தலைவர் தருண் விஜய் கூறுகையில், "திருக்குறள் போட்டியில் தேர்வான மாணவர்களுக்கும், எனக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார். தேச ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் இது ஒரு நல்ல செயலாகும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்" என்றார்.