கொலை மிரட்டலால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற தஸ்லிமா நஸ்ரின்
டெல்லி: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் இந்தியாவில் இருந்து வெளியேறி அமெரிக்கா சென்றுள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் வசித்து வந்தார். இந்நிலையில் வங்கதேசத்தில் மதச்சார்பற்ற பிளாக்கர்களான அவிஜித் ராய், வாசிகிர் ரஹ்மான் மற்றும் அனந்த பிஜோய் தாஸ் ஆகியோர் இஸ்லாத்தை தீவிரவமாக பின்பற்றுபவர்களால் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அடுத்ததாக தஸ்லிமா நஸ்ரினை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியானது.
இதையடுத்து தஸ்லிமா அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அவரை நியூயார்க்கைச் சேர்ந்த தி சென்டர் ஃபார் என்கொயரி என்ற அமைப்பு அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. அவர் அமெரிக்காவில் பாதுகாப்பாக தங்கவும் அந்த அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. தஸ்லிமா அமெரிக்காவில் தங்கியிருக்கும் வரை அவரது செலவை கவனிக்க அந்த அமைப்பு நிதி திரட்டியுள்ளது.
இது குறித்து சென்டர் ஃபார் என்கொயரியின் சிஇஓ ரொனாலாட் ஏ. லின்ட்சே கூறுகையில்,
தஸ்லிமா ஒரு சர்வதேச ரோல் மாடல். அவரின் படைப்புகளும், துணிச்சலும் பலருக்கு முன்மாதிரியாக உள்ளது. தஸ்லிமாவின் உயிருக்கு ஆபத்து இருக்கையில் எங்களால் அதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றார்.
இந்நிலையில் அச்சுறுத்தல் நீங்கும் வரை அமெரிக்காவில் இருந்துவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்துவிடுவேன் என தஸ்லிமா தெரிவித்துள்ளார்.