மோடி அரசாவது உதவி செய்யுமா? வங்கதேசம் திரும்ப துடிக்கும் தஸ்லிமா நஸ்ரின்
டெல்லி: புதிய மோடி அரசாவது தாம் வங்கதேசம் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமா என்று காத்திருப்பதாக பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார்.
வங்கதேசத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். இஸ்லாம் மதத்தில் பிற்போக்குத் தனங்கள் இருப்பதாக கூறி அவற்றை கேள்விக்குள்ளாக்கியவர் தஸ்லிமா. இதனால் அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
மேற்கு வங்கம் டூ டெல்லி
அங்கிருந்து வெளியேறிய தஸ்லிமா மேற்கு வங்கத்தில் நீண்டகாலம் இருந்து வந்தார். ஆனால் அங்கிருந்தும் அவர் வெளியேற்றப்பட்டு டெல்லியில் வீட்டு காவலில் இருந்தார்.
ட்விட்டரில் தீவிரம்
பின்னர் அவர் டெல்லியில் இருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்தார். தற்போது டெல்லியில் இருக்கும் தஸ்லிமா நஸ்ரின், ட்விட்டரில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
நாடு திரும்ப விருப்பம்
இந்த நிலையில் 20 ஆண்டுகள் ஓடிவிட்டன.. இனியாவது வங்கதேச அரசு என்னை தாய்நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று தஸ்லிமா நஸ்ரின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அலைகிறேனே..
இது குறித்து தஸ்லிமா கூறுகையில், டெல்லியில் நாள்தோறும் வங்கதேச தூதரகத்துக்கு சென்று வெறுங்கையோடுதான் திரும்புகிறேன். அந்நாட்டு அரசு என் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இதற்கான நான் கொள்கையில் இருந்து ஒருபோதும் விலகிவிட்டேன் என்பது அல்ல என்றார்.
மோடி அரசு உதவலாமே..
மேலும் இந்தியாவில் உள்ள மோடி அரசும் கூட நான் நாடு திரும்புவது குறித்து வங்கதேச அரசிடம் பேசி உதவினால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார்.