ரூ.12,000 கோடி டாடா ஏர்பஸ் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய பாதுகாப்பு அமைச்சகம்
பெங்களூர்: இந்திய விமானப் படைக்கு 56 ஏர்பஸ் விமானங்களை தயாரித்து கொடுக்கும் டாடா நிறுவனத்தின் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாதுகாப்பு துறை தொடர்பான பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டங்களில் ரூ. 11 ஆயிரத்து 929 கோடி மதிப்புள்ள அவ்ரோ அதாவது ஏர்பஸ் ஒப்பந்தமும் ஒன்று என்று பாதுகாப்புத் துறை அமைச்சக ஆட்கள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர்.
ஏர்பஸ் ஒப்பந்த டென்டர்படி வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனம் ஹெச்.ஏ.எல். தவிர வேறு ஒரு இந்திய நிறுவனத்தை கண்டுபிடித்து 16 ஏர்பஸ் விமானங்களை தயாரித்து வழங்கிவிட்டு மீதமுள்ள 40 விமானங்களை தயாரிக்கத் தேவைப்படும் தொழில்நுட்பத்தை அந்நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். விமானங்களை தயாரிக்க டென்டர் கோரிய ஒரே இந்திய நிறுவன் டாடா தான்.
இந்நிலையில் ஒப்பந்தத்தின்படி டாடா-ஏர்பஸ் கன்சார்டியம் 56 ஏர்பஸ் விமானங்களை(ஏர்பஸ் சி295) இந்திய விமானப்படைக்கு வழங்க வேண்டும். ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் 200 கமோவ் ஹெலிகாப்டர்களை பெறுவது, கடற்படைக்கு ரூ.2 ஆயிரத்து 700 கோடியில் மேலும் 6 பிரமோஸ் ஏவுகணைகளை பெறுவது உள்ளிட்டவையும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டங்களில் அடக்கம்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் இரண்டு போயிங் 777இஆர் விமானங்களை விவிஐபிகளுக்கான விமானங்களாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்கத் தேவைப்படும் திட்டங்களுக்கு தான் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் தயாரிப்பை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு ஹெச்.ஏ.எல். நிறுவனம் துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பது பற்று ஹெச்.ஏ.எல். கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.