'நானோ'வுக்கு கொடுத்த இடத்தில் 'ஜாகுவார்' காரைத் தயாரிக்கும் டாடா..புது சர்ச்சை!
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் டாடாவின் நானோ கார் ஆலைக்காக கொடுத்த இடத்தில் தற்போது தனது சொகுசுக் காரான ஜாகுவாரை தயாரித்து வருகிறது டாடா நிறுவனம் என்று குற்றம் சாட்டியுள்ளார் குஜராத் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா.
மக்களுக்கான குறைந்த விலை கார் என்பதைச் சொல்லித்தான் டாடா நிறுவனம் குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் மிகக் குறைந்த விலைக்கு இந்த இடத்தை வாங்கி ஆலை அமைத்தது. மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அமைத்த ஆலைக்கு பெரும் பிரச்சினை கிளம்பியபோது டாடாவுக்குக் கை கொடுத்தவர் மோடி.
அதை விட முக்கியமாக ஒரு ஏக்கர் நிலத்தை வெறும் ஒரு ரூபாய்க்கு டாடா நிறுவனத்திற்காக விற்றார். ஆனால் அந்த இடத்தில் மக்களுக்கான குறைந்த விலைக் காரை தயாரிக்காமல் பெரும் பணக்காரர்களால் மட்டுமே வாங்க முடியும் ஜாகுவார் காரை தயாரித்து வருகிறார் டாடா என்று வகேலா குற்றம் சாட்டியுள்ளார்.
அட டயரைக் கூட தயாரிக்கலையே...
இதுகுறித்து குஜராத் சட்டசபையில் வகேலா பேசுகையில், நானோவின் டயரைக் கூட இங்கு தயாரிக்கவில்லை டாடா நிறுவனம். விவசாயப் பல்கலைக்கழகத்திற்காக வைத்திருந்த இடத்தைதத் தூக்கி டாடாவிடம் கொடுத்தது குஜராத் அரசு. ஆனால் இங்கு பணக்காரர்களுக்கான காரைத் தயாரித்து வருகிறது டாடா.
டாடாவுக்காக விவசாயிகளைக் காவு கொடுத்த மோடி
இதன் மூலம் விவசாயிகளையும், அவர்களது நலன்களையும் டாடா நிறுவனத்திடம் மொத்தமாக காவு கொடுத்து விட்டது குஜராத் அரசு.
எல்லாமே பொய்
வைப்ரன்ட் குஜராத் கூட்டங்கள் மூலம் மாநிலத்தின் முதலீடுகள் குறித்து மோடி அரசு தெரிவித்துள்ள அத்தனையுமே பொய்யான தகவல்கள்தான். பொய்யான புள்ளிவிவரங்கள்தான். கல்வி, சுகாதாரம், மற்றும் பிற துரைகளில் மோடி அரசு மிக மோசமாக செயல்பட்டுள்ளது என்றார் வகேலா.
2008ல் கால் பதித்த டாடா மோட்டார்ஸ்
கடந்த 2008ம் ஆண்டு குஜராத் அரசுக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் இடையே நல்லுறவு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி வெறும் 0.10 சதவீத வட்டியில் ரூ. 2138.85 கோடி கடனை வழங்க குஜராத் அரசு ஒப்புதல் அளித்தது.
மேலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நானோ ஆலைக்காக விவசாயப் பல்கலைக்கழகம் அமைக்கத் திட்டமிட்டிருந்த இடத்தை ஏக்கருக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் மிகவும் மலிவான முறையில் வழங்கியது குஜராத் அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.