தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய வசதி...டிக்கெட் புக் செய்து 15 நாள் கழித்து பணம் செலுத்தலாம்!
தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து 15 நாட்களுக்குப் பிறகு பணத்தை செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி : தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையை எளிமைப்படுத்தும் விதமான புதிய வசதியை இந்தியன் ரயில்வே தனது ஐஆர்சிடிசி இணையதறத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி டிக்கெட் புக் செய்து 15 நாட்கள் கழித்து பணம் செலுத்தலாம்.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சியின் இணையதளத்தில் ரயில் டிக்கெட்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். இதுவரை பொது பெட்டிகளுக்கு முன்பதிவு செய்யும் போது தான் முதலில் முன்பதிவு செய்து விட்டு பின்னர் பணம் செலுத்தலாம் என்ற நடைமுறை இருந்தது. தற்போது இந்த நடைமுறை தட்கல் முறையில் முன்பதிவு செய்யும் போதும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தகவல்
மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோகெய்ன் லோக்சபாவிற்கு எழுத்து மூலம் அளித்துள்ள கடிதத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
'ஈ பே லேட்டர்' முறை
ரயில் பயணிகள் தட்கல் முறையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 'ஈ பே லேட்டர்' திட்டம் காண்பிக்கும். இதன் மூலம் டிக்கெட் பதிவு செய்துவிட்டு 15 நாட்களுக்குப் பிறகு பணத்தை செலுத்தலாம். தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட பின்னர் வாடிக்கையாளருக்கு ஒரு ஈமெயில் லிங்கும், செல்போனிற்கு ஒரு குறுஞ்செய்தியும் வரும் அதனை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட அவகாசத்திற்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
சேவை கட்டணம்
15 நாள் அவகாசத்திற்குள் ரயில் கட்டணத்துடன் 3.6 சதவீதம் சேவை கட்டணமும் செலுத்த வேண்டும். ஜாலியாக டிக்கெட் செய்துவிட்டு பயணத்தை முடித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடலாம் என்று நினைக்க முடியாது, ஏனெனில் அங்கு தான் டுவிஸ்ட் உள்ளது.
அபராதம்
டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், அதோடு டிக்கெட் கட்டணத்தை 15 நாள் அவகாசத்திற்குள் செலுத்தாவிட்டால் 36 சதவீத வட்டியை அபராதமாக செலுத்த வேண்டும். மேலும் வாடிக்கையாளரின் ஐஆர்சிடிசியின் கணக்கு ரத்து செய்யப்படும்.
'டோர் டெலிவரி' முறையிலும் மாற்றம்
இதே போன்று 'டோர் டெலிவிரி' எனப்படும் முறையில் தட்கல் நடைமுறையில் டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்யும் போது, டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட் அல்லது இ - பேங்கிங் வசதி மூலம் பணம் செலுத்த வேண்டும். இனிமேல், 'டோர் டெலிவிரி' செய்யப்பட்ட பிறகு பணம் செலுத்தினால் போதும் என்ற முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.