டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என். சந்திரசேகரன் நியமனம்
மும்பை: டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து டாடா குழும தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2012ல் டாடா சன்ஸ் குழுமத் தலைவராக நியமிக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரி அண்மையில் நீக்கப்பட்டார். இதையடுத்து இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே புதிய தலைவரைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் மும்பையில் டாடா குழுமத்தின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடராஜன் சந்திரசேகரன் டாடா குழுமத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடராஜன் சந்திரசேகரன் தற்போது டிசிஎஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். 53 வயதாகும் நடராஜன் நாமக்கல் மாவட்டம், மோகனூரில் 1963 ஆம் ஆண்டு பிறந்தவர். திருச்சி ஆர்.இ.சி. பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். நாட்டின் முன்னணி தொழில் குழுமத்தின் தலைமை பொறுப்பில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.