டிசிஎஸ் பணி நீக்கத்திற்கு எதிராக கோர்ட் படியேறுவதே தீர்வு- ஐடி ஊழியர்கள் நல அமைப்பு திட்டவட்டம்!
பெங்களூரு: டிசிஎஸ் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் ஊழியர் பணி நீக்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாட ஐடி ஊழியர்கள் நல அமைப்பு முடிவு செய்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டிசிஎஸ்), தனது நிறுவனத்தில் பணியாற்றும் 25 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, புதிய ஊழியர்களை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களிலும் உள்ள டிசிஎஸ் நிறுவன கிளைகளில் இருந்து ஐடி ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளனர்.
தகுதியில்லையாம்..
தற்போது பணியாற்றும் ஊழியர்களை காரணமேயின்றி, வெளியேற்றுவதுடன், பணி தேவையை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்றும் முத்திரை குத்தி வெளியேற்றப்படுவதாக ஊழியர்கள் பலரும் பொறுமிவருகின்றனர். இருப்பினும் ஐடி நிறுவனங்களின் கடும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வேலை பார்த்து வந்த ஊழியர்களுக்கு, எதிர்த்து போராடும் மனநிலை வரமாட்டேன் என்கிறது.
போராடுவதில்லை
போராட்டம் நடத்தினால் பாதிப்பு வந்துவிடுமோ என்று எதிர்காலம் குறித்த பயந்தபடியே நிகழ்காலத்தையும் தொலைத்து வருகின்றனர், பணி நீக்கம் செய்யப்பட்ட மற்றும் செய்யப்பட வாய்ப்புள்ள ஐடி ஊழியர்கள்.
போராட்டம் நடத்தினால் வருவதில்லை..
இதனிடையே பெங்களூருவில் ஐஐஇசி என்று அழைக்கப்படும் ஐடி ஊழியர்களுக்கான நல அமைப்பு ஒன்று, டிசிஎஸ் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்புவிடுத்திருந்தது. டவுன்ஹால் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு விரல் விட்டு எண்ணக்கூடிய ஐடி ஊழியர்களே வந்திருந்தனர்.
பாதியிலேயே வெளியே தள்ளினர்
இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்ற பெயர் தெரிவிக்க விரும்பாத ஐடி ஊழியர் ஒருவர் கூறுகையில், "ஒரு புராஜக்ட்டை செய்து கொண்டிருந்தபோதே பணியில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. என்னைப்போலவே பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
நீதிமன்றமே தீர்வு
ஐடி ஊழியர் நல அமைப்பு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "போராட்டத்தில் பங்கேற்றால் எதிர்காலத்திற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று பயந்து இந்த போராட்டத்தில் பலரும் பங்கேற்கவில்லை. 12 முதல் 15 வருடங்கள் வரை வேலை பார்த்த பலரும், டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென வேலையை விட்டு தூக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் என்றும், கர்நாடக மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்றும் திட்டமிட்டுள்ளோம்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.