அடுத்த வாரிசு... தெலுங்குதேசம் பொதுச்செயலரானார் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ்!!
விஜயவாடா: தெலுங்குதேசம் கட்சியின் பொதுச்செயலராக அக்கட்சியின் தேசியத் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்குதேசம் கட்சியின் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கான நிர்வாகிகளை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திரா மாநில தெலுங்குதேசம் கட்சியின் தலைவராக முன்னாள் உள்துறை அமைச்சர் கிமிடிகல வெங்கட ராவ், தெலுங்கானா தலைவராக எல். ரமணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மேல்சபை தேர்தலில் எம்.எல்.ஏக்களை பணம் கொடுத்து பேரம் பேசிய வழக்கில் கைதான ரேவந்த் ரெட்டிக்கு அம்மாநில செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் தேசிய கமிட்டியின் பொதுச்செயலராக சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் (வயது 32) நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்குதேசம் கட்சியில் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் இதுவரை தொண்டர் நல நிதி ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை வகித்து வந்தார்.
அத்துடன் 17 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் பொலிட்பீரோவில் மைத்துனர் ஹரிகிருஷ்ணாவையும் சந்திரபாபு நாயுடு நியமித்துள்ளார். இந்த பொலிட்பீரோவில் அசோக் கஜபதி ராஜூ, ராமகிருஷ்ணுடு, கிருஷ்ணமூர்த்தி, உமா மாதவ ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தெலுங்குதேசம் கட்சியின் 33 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக மத்திய கமிட்டி எனப்படும் பொலிட்பீரோ தற்போது உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.