தெலுங்குதேசம் -பாஜக கூட்டணி அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது!
ஹைதராபாத்: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் தெலுங்குதேசம் கூட்டணி அமைக்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் மாநிலக் கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜகவோ, காங்கிரஸோ அல்லது மூன்றாவது அணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். இதனால் மாநில கட்சிகளை இவை அரவணைத்துக் கொண்டிருக்கின்றன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ், திமுக ஆகியவை ஏற்கெனவே வெளியேறிவிட்டன. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளமும் விலகிவிட்டது.
இதனால் லோக்சபா தேர்தலில் புதிய அணி உருவாகலாம் என்று தெரிகிறது. தற்போது பாரதிய ஜனதா அணியில் தெலுங்குதேசம் கட்சி இணையக் கூடும் எனத் தெரிகிறது. தற்போது பற்றி எரியும் தெலுங்கானா விவகாரம் முடிவுக்கு வந்த உடன் ஜனவரியில் முறையான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
அண்மையில்தான் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியும் சந்திரபாபுவும் ஒரே மேடையில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.