பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகல்-மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்!
மோடி அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சியே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உள்ளது.
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சியும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உள்ளது. இதையடுத்து பாஜகவுடனான கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்துவிட்டது மத்திய அரசு. இதனால் பாஜகவுடனான தெலுங்குதேசம் கூட்டணியில் விரிசல் எற்பட்டது.
இந்நிலையில் மோடி அரசுக்கு எதிராக ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உள்ளது. இத்தீர்மானத்தை லோக்சபாவில் ஆதரிப்போம் என தெலுங்குதேசம் அறிவித்தது.
தற்போது தெலுங்குதேசம் கட்சியே மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது தெலுங்குதேசம்.
அண்மையில் ஆந்திரா அரசில் இருந்து பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அதேபோல் மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்குதேசம் கட்சியின் அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜூ, சவுத்ரி ஆகியோரும் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.