பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது ஒருதலைபட்சமானது: சந்திரபாபுவுக்கு அமித்ஷா கடிதம்
பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது துரதிருஷ்டவசமானது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி: பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது ஒருதலைபட்சமானது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமித்ஷா கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியும் அங்கம் வகித்தது. இந்நிலையில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரி வந்தார்.
இதை மத்திய அரசு காதில் போட்டு கொள்ளவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த நாயுடுவை அமித்ஷா சமாதானம் செய்தார். இதைத் தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அமைக்க இயலாது என்று மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து அந்த கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகுவதாக அறிவித்துவிட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அதுபோல் மாநில அமைச்சரவையில் அங்கம் வகித்த பாஜகவினரும் ராஜினாமா செய்தனர்.
இந்த விவகாரம் நடந்து ஒரு வார காலத்துக்கு பிறகு சந்திரபாபு நாயுடுவுக்கு அமித்ஷா வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், பாஜக கூட்டணியிலிருந்து உங்கள் கட்சி வெளியேறியது துரதிருஷ்டவசமானது, ஒரு தலைபட்சமானது என்று அமித்ஷா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.