என்னிடம் ஆதாரம் உள்ளது, தெலுங்கு தேசம் கட்சியினரின் தோலுரிப்பேன்: நடிகை ரோஜா
ஹைதராபாத்: நான் ஒரு சினிமாக்காரி என்று கூறுகிறார்கள். ஒரு சினிமா நடிகர் துவங்கிய கட்சியே தெலுங்கு தேசம் என்பதை மறுந்துவிட்டு அவர்கள் பேசுகிறார்கள் என நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் கால் மணி என்ற பெயரில் கந்து வட்டி விடப்படுகிறது. ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன் சிலர் கால் மணி தொழிலை அமோகமாக செய்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினரிடம் விளக்கம் கேட்டு சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ரோஜா கால் மணி தொழிலுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு டாக்டர் பட்டம் பெற தகுதி இல்லை என்றார்.
இதையடுத்து ரோஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கு தேசம் கட்சியினர் சபாநாயகரை கேட்டுக் கொண்டனர். அதன் பிறகு ரோஜா ஓராண்டு காலம் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ரோஜா கூறுகையில்,
சட்டசபையில் எனக்கு பேச அனுமதி அளிக்கவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் நான் பேசுவதை யாரும் தடுக்க முடியாது. சட்டசபையில் எனக்கு நடந்த அநியாயத்தை மாநிலம் முழுவதும் தெருத் தெருவாக கூட்டம் போட்டு மக்களிடம் கூறுவேன்.
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்களின் நாகரீகம் இல்லாத செயல்களை பற்றி மக்களிடம் தெரிவிப்பேன். அவர்கள் என்னைப் பற்றி அநாகரீகமாக பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. நான் ஒரு சினிமாக்காரி என்று கூறுகிறார்கள். ஒரு சினிமா நடிகர் துவங்கிய கட்சியே தெலுங்கு தேசம் என்பதை மறுந்துவிட்டு அவர்கள் பேசுகிறார்கள் என்றார்.