திருப்பதி கோவில் அறங்காவலர் குழு- எம்.எல்.ஏ அனிதா விலகல்
திருப்பதி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமன சர்ச்சையால் எம்.எல்.ஏ அனிதா விலகினார்.
Recommended Video
அமராவதி : திருப்பதி அறங்காவலர் குழுவில் இருந்து விலகுவதாக எம்.எல்.ஏ அனிதா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 14 பேர் அடங்கிய அறங்காவலர் குழுவை கடந்த வெள்ளிக்கிழமை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதில், ஆந்திரா கடப்பாவைச் சேர்ந்த தொழிலதிபர் புட்ட சுதாகர் யாதவ் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழு அமைக்கப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. பயாகராவ்பேட்டை தொகுதியைச் சேர்ந்த, தெலுங்கு தேசக் கட்சியின் பெண் சட்டமன்ற உறுப்பினர் வங்கலபுடி அனிதா என்பவர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டதற்கு சர்ச்சை எழுந்துள்ளது.
கிறிஸ்துவரான அனிதாவை இந்தப் பதவியில் நியமித்தது செல்லாது எனவும், இந்து மத அறக்கட்டளையான திருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரை நியமனம் செய்தது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
மேலும், வாட்ஸ் அப்பில் சட்டமன்ற உறுப்பினர் அனிதா பேசும் வீடியோவும் வெளியாகி உள்ளது. அதில், தான் கிறிஸ்துவர் என்றும், தனது கைப்பை மற்றும் காரில் எப்போதும் பைபிள் வைத்திருப்பேன் என்றும் அவர் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் அனிதா இந்தப் பதவியில் இருந்து தான் விலகுவதாக சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
TDP MLA Vangalapudi Anitha writes to Andhra CM N Chandrababu Naidu over her nomination to Tirumala Tirupati Devasthanams board requesting him to withdraw her appointment as a member of the board, writes 'I do not want this controversy to cause embarrassment to you & govt'. pic.twitter.com/NWrjx3OhES
— ANI (@ANI) April 23, 2018
அந்தக்கடிதத்தில், தான் இந்து மதத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்றும், ஒருபோதும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது நியமனத்தில் எழுந்துள்ள தேவையற்ற சர்ச்சைகளால், அரசுக்கும், முதல்வருக்கும் எந்தவித சங்கடத்தையும் ஏற்படுத்தவிரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே, இந்தப் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.