லோக்சபாவில் 'நம்பிக்கை இல்லா தீர்மான' விவகாராத்தை இன்று எழுப்பும் தெ.தேசம், ஒய்எஸ்ஆர் காங்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்க வலியுறுத்தி தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் லோக்சபாவில் இன்று குரல் கொடுக்க உள்ளன.
டெல்லி: லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்க தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் இன்று வலியுறுத்த உள்ளன.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இதனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக நோட்டீஸ் கொடுத்தது.
அதிரடி முடிவு
இதையடுத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகியது தெலுங்குதேசம். அத்துடன் அந்த கட்சியும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.
எதிர்க்கட்சிகள் அமோக ஆதரவு
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானங்களை காங்கிரஸ், திரிணாமுல், இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரிப்பதாக அறிவித்திருக்கின்றன. 3-வது பெரிய கட்சியான அதிமுக மவுனம் காக்கிறது.
இன்று லோக்சபாவில் வலியுறுத்தல்
ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க 50 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. இரு நம்பிக்கை இல்லா தீர்மானங்களையும் பல கட்சி எம்.பி.க்கள் ஆதரிக்கின்றனர். இதனால் தீர்மானத்தை ஏற்க வேண்டும் என லோக்சபாவில் இன்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தக் கூடும்.
ஆட்சிக்கு பாதிப்பு இல்லை
பாஜகவுக்கு தற்போது லோக்சபாவில் 274 எம்.பிக்கள் ஆதரவு உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் இருக்கிறது. இதனால் தற்போதைய சூழலில் ஆட்சிக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை.