ரூ. 9 கோடிக்கு சமோசாவும், ஜாமூனும் சாப்பிட்ட உ.பி. அமைச்சர்கள்... சபையில் அம்பலப் படுத்திய முதல்வர்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அமைச்சர்கள் சுமார் 9 கோடி ரூபாய்க்கு டீ, காபி, சமோசா, குலோப்ஜாமூன் போன்றவற்றை சாப்பிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநில முதல்வராக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் மகன் அகிலேஷ் யாதவ் பதவி வகித்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு மாயாவதி ஆட்சியை தோற்கடித்து அகிலேஷ் முதல்வர் ஆனார்.
இந்நிலையில் நேற்று அம்மாநில சட்டசபையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், "கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் அமைச்சர்களுக்கு உணவுப்பண்டங்கள் வாங்கிய வகையில் ஒன்பது கோடி அளவில் செலவு செய்யப்பட்டிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
நொறுக்குத் தீனிக்கு மட்டும்...
அதாவது, கடந்த நான்கு ஆண்டுகளில் அமைச்சர்களுக்கு டீ, காபி, சமோசா, குலோப் ஜாமூன் போன்ற உணவுப் பண்டங்கள் வாங்க மட்டும் 8 கோடியே 78 லட்சத்து 12 ஆயிரத்து 474 ரூபாய் செலவு ஆகி இருப்பதாகவும், இவை எல்லாம் அமைச்சர்களை சந்திக்க வந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்கிய செலவுகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புள்ளி விபரத்தோடு....
அதிலும், எந்தெந்த அமைச்சர்களுக்கு எவ்வளவு தொகை நொறுக்குத் தீனி வாங்க செலவாகி இருக்கிறது என்பதையும் அவர் ரமணா ஸ்டைலில் விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.
சமூக நலத்துறை தான் டாப்...
அதன்படி, சமூக நலத்துறை அமைச்சராக இருந்த அருண் குமார் கோரி 22,93,800 ரூபாய் செலவு செய்து முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் முகமது ஆஸம் கான் 22,86,620 ரூபாய் செலவு செய்து இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருப்பது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கைலாஷ் சவுர்ஷியா. இவர் 22,85,900 ரூபாய் செலவு செய்துள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அகிலேஷ்.
சிக்கனமான அமைச்சர்...
ஆனால், இந்த அமைச்சர்களில் இருந்து வேறுபட்டு, பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் சிவ்பால் யாதவ் ஒரு ரூபாய் கூட இப்படி நொறுக்குத் தீனிக்காக செலவு செய்யவில்லை என்கிறது இந்த அறிக்கை. சிவ்பால், அகிலேஷ் யாதவ்வின் மாமா என்பது குறிப்பிடத்தக்கது.