விமானப்படை அதிகாரியான டீ கடைக்காரரின் மகள் - சீருடை அணிந்து பறக்க நினைத்த கனவு நனவானது
விமானத்தில் பறக்க வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். அதே நேரத்தில் விமானப்படையில் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு ஒரு சிலருக்கு மட்டுமே வரும் அதுவும் ஒரு சிறிய கிராமத்தில் டீ கடைக்காரரின் மகள்
போபால் : டீ கடைக்காரரின் மகள் ஒருவர் விமானப்படை அதிகாரியாக உயர்ந்துள்ளார். தனது சிறுவயது கனவு இதன் மூலம் நனவாகி விட்டதாக பெருமிதம் கொள்கிறார். பறக்க வேண்டும் என்ற கனவு பலமுறை வருவதுண்டு. சிலர் விமானத்தில் பறந்து போக நினைக்கலாம். அதே நேரத்தில் விமானப்படையில் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவு பலருக்கு வருவதில்லை. ஆஞ்சால் கங்வால் என்ற சிறுமிக்கு சிறுவயதில் இருந்தே பறக்க வேண்டும் என்ற கனவு இருந்தது அதை தனது 23வது வயதிற்குள் நிறைவேற்றிக்கொண்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் கங்வால் என்பவரின் மகள்தான் ஆஞ்சல் கங்வால். விமானப்படையில் சேர வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க ஏர்போர்ஸ் காமன் அட்மிசன் தேர்வை ஐந்து முறை எழுதினார், 5 முறையும் தோல்விதான் என்றாலும் மனம் தளரவில்லை. ஆறாவது முறையாக தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதினார். இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதினாலும் 22 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர் அதில் ஆஞ்சல் கங்வாலும் ஒருவர் என்பதுதான் சிறப்பு.
சீருடை அணிய வேண்டும் என்ற கனவு ஆஞ்சலுக்கு உண்டு. அதோடு அவரது சொந்த ஊரில் சிஆர்பிஎஃப் பயிற்சி மையமும் உள்ளதால் சீருடைய மீதான ஆசை அதிகரித்திருக்கலாம். தனது ஆசையை பெற்றோரிடம் கூறிய போது அவர்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் விடாப்பிடியாக போராடி தனது லட்சியத்தை அடைந்திருக்கிறார்.
லடாக் ஷாக் ஓயாத நிலையில்.. இந்திய-சீன ராணுவத்தினர் மோதல், கைகலப்பு.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ
கணினி அறிவியல் பட்டம்
நீமுச்சில் உள்ள சீதாராம் ஜாஜூ அரசு பெண்கள் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்ற ஆஞ்சல், தனது கனவை நோக்கிய பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தார். அவ்வப்போது அப்பாவின் டீ கடைக்கு வந்து உதவி செய்யவும் தவறுவதில்லை. வேலை செய்து கொண்டே படிப்பிலும் கவனம் செலுத்தினார். கடைசியில் தனது கனவை நனவாக்கியுள்ளார்.
23 வயதில் சாதனை
விமானப்படையில் தேர்வு பெறுவதற்கு முன்னதாக சில காலங்கள் காவல்துறையில் துணை ஆய்வாளராகவும், மத்திய பிரதேச மாநில அரசில் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார் என்றாலும் அவரது கனவு விமானப்படையில் அதிகாரியாக வேண்டும் என்பதுதான். தனது 23வது வயதில் தனது தகுதியை நிரூபித்தார்.
பயிற்சி நிலையத்தில் அணிவகுப்பு
தேர்வில் வெற்றி பெற்று விமானப்படை அதிகாரியாக திண்டிக்குலில் உள்ள விமானப்படை அகாடமியில் பயிற்சி பெற்ற ஆஞ்சல் அங்கேயும் சாதிக்க தவறவில்லை. கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் ஜனாதிபதி விருது பெற்றார். தனது கனவு நனவானதே என்ற மகிழ்ச்சி இருந்தாலும் இலேசான வருத்தமும் ஆஞ்சலுக்கு உள்ளது. அது தனது பெற்றோர் இந்த அணிவகுப்பை காண முடியவில்லையே என்பதுதான்.
சீருடை அணிந்த ஆஞ்சல்
கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் ஆஞ்சலின் பெற்றோர் சுரேஷ் பபிதா கங்வால் ஆகியோரால் மகளின் அணிவகுப்பில் பங்கேற்க முடியவில்லை என்பதுதான். நான் சீருடையில் அணிவகுத்து செல்வதை என் பெற்றோர் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இப்போதைய சூழ்நிலையில் அது முடியாமல் போய் விட்டது.
சிறு வயது கனவு நனவானது
எந்த ஒரு லட்சியத்திற்கும் ஒரு காரணம் வேண்டும் ஆஞ்சல் விமானப்படையில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கு உத்தரகண்ட் வெள்ளமும் அந்த வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானப்படை அதிகாரிகள் உயிரை துச்சமென மதித்து மீட்டிருக்கின்றனர். அதை தொலைக்காட்சியில் பார்த்துதான் தானும் விமானப்படையில் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். அப்போது 12ஆம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தார் ஆஞ்சல். பெற்றோரிடம் தனது லட்சியத்தை சொல்லி சம்மதம் பெற்றிருக்கிறார். நாட்டுக்காக சேவை செய்ய பறக்கத் தயாராகி விட்டார் ஆஞ்சல் கங்வால். கனவும் லட்சியம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இயற்கையும் ஒத்துழைக்கும். அஞ்சல் கங்வால் வாழ்க்கை சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் முன் பாடம்.