வீட்டுப்பாடம் செய்யாத சிறுமிக்கு 'பெல்ட்'டால் அடி... டியூசன் டீச்சருக்கு பெங்களூர் போலீஸ் வலை
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே வீட்டுப் பாடம் செய்யாத மாணவியை 'பெல்ட்'டால் பலமாக தாக்கிய டியூசன் டீச்சரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுன் சுபாஷ் நகரில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருடைய மகள் பாவனா (7). அந்த அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பாவனா 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பாவனா கடந்த ஒரு வருடமாக அப்பகுதியில் டியூசன் சென்று வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பாவனா, வீட்டுப்பாடம் செய்யாமல் டியூசனுக்கு சென்றதாக தெரிகிறது. இதனால், டியூசன் ஆசிரியை லதா, சிறுமியை கண்டித்ததோடு, 'பெல்ட்'டால் பாவனாவை பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுமியின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டது. வலியால் துடித்த பாவனா , டியூசனில் இருந்து அழுது கொண்டே தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
மேலும், தனது உடலில் இருந்த காயங்களை தனது பெற்றோரிடம் காண்பித்து அழுதுள்ளார்.இதைக்கேட்டு அதிர்ச்சி பெற்றோர், பாவனாவை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து பாவனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான டியூசன் டீச்சர் லதாவை தேடி வருகின்றனர்.
போலீஸாரின் விசாரணையில், லதா இதற்கு முன்பும் இது போல டியூசன் வரும் மாணவர்களை தாக்கியது தெரியவந்துள்ளது. ஆனால், குழந்தையின் பெற்றோர்களோ, அது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததில்லையாம். தங்கள் குழந்தையின் மீதே தவறு இருக்கும் என பெற்றோர்கள் நினைத்துக் கொண்டு புகார் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.