நீண்ட கூந்தலைக் காட்டவா பள்ளிக்கு வருகிறீர்கள்... மாணவிகள் முடியை வெட்டி ஆசிரியர் அட்டூழியம்
சத்தீஸ்கார் மாநிலத்தில் நீண்ட கூந்தலை காட்டவா பள்ளிக்கு வருகிறீர்கள் என்று கூறி பள்ளி மாணவிகள் 7 பேரின் முடியை வெட்டி அட்டூழியம் செய்த ஆசிரியரை அந்த மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
ராய்கார்க்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார்க் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 7 பேரை நீண்ட கூந்தலைக் காட்டவா வகுப்புக்கு வருகின்றீர்கள் கூறி அவர்களது முடியை கத்திரியால் வெட்டி அட்டூழியம் செய்த ஆசியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குற்றச்சாட்டுக்குள்ளான புஷ்பேந்திரா பட்டேல் என்ற கணக்கு ஆசிரியரை கைது செய்ததாக ராய்க்கார்க் மாவட்டத்தில் உள்ள பூப்தியோபுர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 8-ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் படித்து வருவது தெரியவந்துள்ளது. அந்த மாணவிகளிடம் நீங்கள் இங்கு உங்களது நீண்ட கூந்தலைக்காட்ட வரவில்லை என்று கூறி அந்த ஆசிரியர் இரண்டு கத்திரிகளைக் கொண்டு அவர்களது முடியை வெட்டியிருக்கிறார்.
புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அந்த ஆசிரியர் மாணவிகள் படிக்கத்தான் பள்ளிக்கு வருகிறார்கள் என்றும், அவர்களது நீண்ட முடியை காட்ட இங்கு வரவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், மாணவர்கள் எவ்வளவு முடியுமே அவ்வளவு எளிதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இருப்பினும், தங்களின் முடியை வெட்டி அசிங்கப்படுத்திய அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறுகையில், அந்த ஆசிரியருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அவரது செயல் மூலம் எங்களை அசிங்கப்படுத்தி விட்டார் எனக் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஆசிரியர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.