எச்.எம். தலைமையில் மாணவர்கள் முன்பு குத்தாட்டம் போட்ட 6 ஆசிரியைகள்.. எச்சரிக்கை + டிரான்ஸ்பர்!
அகர்தலா: திரிபுராவில் பள்ளி மாணவர்கள் முன்பு மது போதையில் அருவருக்கத்தக்க வகையில் நடனமாடிய ஆசிரியைகள் வெவ்வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இயங்கி வரும் அரசு பள்ளி ஒன்றில் பணி புரியும் ஆசிரியைகள் ஆறு பேர் பள்ளி வளாகத்தில் சினிமாப் பாடலுக்கு அருவருக்கத்தக்க வகையில் நடனமாடுவது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. நடனமாடியவர்களில் அப்பள்ளி தலைமையாசிரியையும் ஒருவர்
ஊடகங்கள் மற்றும் இணையத்தில் இந்தப் புகைப்படங்கள் உலா வந்து பரபரப்பைக் கிளப்பின. மது போதையில் மாணவர்கள் முன்பு இவ்வாறு நடனமாடிய ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மத்தியில் புகார் கூறப்பட்டது. குதிராம் போஸ் ஆங்கிலப் பள்ளியில்தான் இந்தக் கூத்து நடந்தது.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியைகளை வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்து அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல ஆசிரியைகளுடன் சேர்ந்து ஆடிய தலைமை ஆசிரியைும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அந்த ஆசிரியைகள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் தபன் சக்ராபோர்டி தெரிவித்துள்ளார்.