பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடி உத்தரவு!
பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஹைதராபாத்: பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஹைதராபாத்தில் டிசம்பர் 15 முதல் 19 ஆம் தேதி வரை 5 நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டார்.
அப்போது அதிகாரிகளிடம் பேசிய அவர் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன பலகைகளும் தெலுங்கிலேயே வைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். மக்கள் விரும்பும்பட்சத்தில் தெலுங்குடன் பிற மொழிகளிலும் பலகைகளை வைத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். அடுத்த கல்வியாண்டு முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.
தொடக்க கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை அனைத்து பாடங்களையும் தெலுங்கில் உருவாக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பாட புத்தகங்களையும் தெலுங்கில் அச்சிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.
தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு கல்வி நிறுவனமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். தெலுங்கானாவில் சில பள்ளிகளில் தெலுங்கிற்கு பதிலாக சிறப்பு ஆங்கிலம் கற்பிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து சந்திரசேகர ராவ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என கூறப்படுகிறது.
தெலுங்குக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.