காவிரியில் கழிவு நீர் கலப்பு- ஆய்வு மேற்கொள்ள கூட்டுக்குழு அமைப்பு
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கர்நாடகம் - மத்திய அரசை சேர்ந்த மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
கர்நாடகத்தின் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு பல கிலோ மீட்டர் தூரம் தடைகளைத் தாண்டி தமிழகத்திற்கு பாய்ந்து வருகிறது.
தமிழகத்திற்கு வரும் வழியில் இந்த ஆற்றில், பல்வேறு வகையான ஆலைகளில் இருந்து கழிவுப் பொருட்கள் கலக்கப்படுகிறது. காவிரி ஆற்றில் கலந்து வரும் மொத்த கழிவுகளில் சுமார் 15 - 20 சதவீதம் மட்டுமே கர்நாடக அரசால் சுத்திகரிக்கப்படுகிறது.
சுத்தமாக உற்பத்தியாகும் காவிரி ஆறு பல அபாயகரமான கழிவுகளோடுதான் காவிரி நீர் தமிழகத்தை வந்து சேருகிறது. அந்த கழிவு நீரைத்தான் தமிழகத்தில் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்துகிறோம்.
கண்டு கொள்ளாத கர்நாடகா
தமிழக அரசு புகார் அளித்தும் கர்நாடக அரசோ இதை தடுக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், அபாயகரமான கழிவுகளோடு வரும் காவிரி தண்ணீரில் விளையும் பயிர்களில் வேதிப்பொருட்கள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது கூறியுள்ளது.
ரூ. 2,400 கோடி இழப்பு
காவிரி ஆற்றில் வளரும் மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்படும்தமிழக விவசாயிகளுக்கு கர்நாடக அரசு ரூ.2 ஆயிரத்து 400 கோடி இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் கோரியது.
கூட்டுக்குழு அமைப்பு
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரியில் கழிவு நீர் கலப்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து காவிரி ஆற்றில் கலக்கும் கழிவு நீர் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் - கர்நாடகம் - மத்திய அரசு இணைந்து கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 முதல் ஆய்வு
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த கூட்டுக் குழுவை அமைத்துள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பரத்வாஜ் தலைமையில் இந்த கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வரும் ஆகஸ்ட் 15 முதல் தனது ஆய்வை தொடங்க உள்ளது.