உலகத்துக்கு முன்பாக நாம் ஓட வேண்டும்: பாதுகாப்பு துறை நிகழ்ச்சியில் மோடி பேச்சு
டெல்லி: பாதுகாப்பு துறையில் புதிய தொழில்நுட்பத்துக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
டெல்லியிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர கலந்துகொண்டு மோடி பேசினார். அவர் கூறியதாவது:
நமது விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடங்களில் கடுமையாக உழைக்கின்றனர், உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. போர் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அளவீடுகளும் மாறி வருகின்றன. தொழில்நுட்பம் இதில் முக்கிய உந்து சக்தியாக மாறிவருகிறது. குறிப்பிட்ட காலநேரத்திற்குள் நாம் இந்த வேலையை முடிப்போம் என்பதில் தான் சவால் உள்ளதாக நான் பார்க்கிறேன்.
உலகம் ஒரு விஷயத்தை 2020ம் ஆண்டில் முடித்தால் நாம் அதை 2018ல் செய்து முடிக்க வேண்டும். இந்தியாவை உலக வல்லரசாக்க, பாதுகாப்பு ஆராய்ச்சியில் நம் நாட்டு விஞ்ஞானிகள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இத்தகைய சூழலில், தொழில்நுட்பம் என்பது முக்கிய கருவியாக மாறிவிட்டது.
நமது விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். இதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். நவீன ஆயுதங்கள் உள்ள நாட்டுக்கு போரில் வெற்றி பெறுவது என்பது மிகவும் எளிதான விஷயம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.