இன்போஸிஸ் நிறுவனத்தில் பயங்கரம்- கான்ப்ரன்ஸ் ரூமில் இளம்பெண் கொலை?
ஜடி நிறுவனத்திற்குள் பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புனே: புனேவில் இயங்கிவரும் ஐடி நிறுவனம் ஒன்றின் கான்ப்ரன்ஸ் ரூமில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது கழுத்தில் ஒயர் சுத்தப்பட்டிருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரசிலா ராஜ. 25 வயதான இவர் புனேவின் ஹிஞ்ஜேவாடியில் உள்ள இன்போஸிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜியாரக பணிபுரிந்து வந்தார்.
விடுமுறை நாளான நேற்று மிச்சமிருந்த சில வேலைகளை செய்வதற்காக அவர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். நேற்றிரவு அலுவலகத்துக்குள் சென்ற பாதுகாவலர் கான்ப்ரன்ஸ் ரூமில் ரசிலா மயக்கநிலையில் கிடைப்பதைக் கண்டு மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரசிலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உதவி கமிஷ்னர் வைஷாலி ஜாதவ் மானே தலைமையில் காவல்துறையினர் இளம் பெண் உயிரிழந்த இன்போஸிஸ் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர்.
இன்போஸிஸ் நிறுவனத்தின் 9வது மாடியில் உள்ள கான்ப்ரன்ஸ் ரூமில் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவரது கழுத்து ஒயரால் நெரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஐடி நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.