கைநரம்பை அறுத்துவிட்டு சாகப் போகிறேன் என ஃபேஸ்புக்கில் தெரிவித்த சாப்ட்வேர் என்ஜினியர்
குர்காவ்ன்: குர்காவ்னில் தற்கொலை செய்யப் போவதாக ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்ட சாப்ட்வேர் என்ஜினியரை போலீசார் காப்பாற்றியுள்ளனர்.
குர்காவ்னை சேர்ந்தவர் வருண் மாலிக்(30). சாப்ட்வேர் என்ஜினியர். அவர் நேற்று தனது கை நரம்பை கத்தியால் கிழித்துக் கொண்டு அதை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டார்.
ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருந்ததாவது,
வருண் மாலிக்காகிய நான் என் வாழ்வை முடித்துக் கொள்கிறேன். இதற்கு யாரும் பொறுப்பு அல்ல. எனக்கு யாரும் இல்லை. தனிமையில் உள்ளேன். வாழ்வை முடித்துக் கொள்வது தான் ஒரே வழி என்று தெரிவித்திருந்தார்.
இதை பார்த்த அவரது நண்பர்கள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது வருண் மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் நலமாக உள்ளார்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
வருண் தனது கை நரம்பை அறுத்து அதை வீடியோ மூலம் தனது நண்பர்களிடம் காண்பித்துள்ளார். அவருக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்த அவரின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் அவர் மனமுடைந்து இருந்துள்ளார்.
வருண் ஓய்வு பெற்ற அவரின் தந்தையுடன் வசித்து வருகிறார் என்றனர்.
வருண் ஃபேஸ்புக்கில் போட்ட ஸ்டேட்டஸ் தற்போது நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.