டீஸ்டா செதல்வாட்டை அக்.15 வரை கைது செய்ய தடை நீடிப்பு- சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: நிதி மோசடி வழக்கில் குஜராத் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டை கைது செய்வதற்கான தடையை அக்டோபர் 15-ந் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்காக போராடி வருபவர் டீஸ்டா செதல்வாட். இவரது என்.ஜி.ஓ. அமைப்புகள் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெற்று இந்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதாக குஜராத் அரசு புகார் செய்தது.
இதனைத் தொடர்ந்து இந்த புகாரை சி.பி.ஐ. விசாரித்து வழக்கு பதிவு செய்தது. அத்துடன் டீஸ்டாவின் சபராங் என்.ஜி.ஓவுக்கு வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கு கொடுத்த அனுமதி உரிமத்தை உள்துறை அமைச்சகம் ரத்து செய்திருந்தது.
இதனிடையே குஜராத் மதக் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் ரூ.1.5 கோடி அளவில் டீஸ்டா செதல்வாட், அவரது கணவர் ஜாவித் ஆனந்த் உள்ளிட்டோர் முறைகேடு செய்ததாக ஒரு வழக்கை அகமதாபாத் போலீசார் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் டீஸ்டா, அவரது கணவர் ஜாவித் ஆகியோருக்கு முன் ஜாமீன் அளிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி இருவரும் மனுத்தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கியதுடன் இருவரையும் கைது செய்யவும் இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, டீஸ்டா, அவரது கணவர் ஜாவித் ஆனந்த் ஆகியோரை கைது செய்வதற்கான தடையை அக்டோபர் 15-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
இதனால் நிதி மோசடி வழக்கில் அக்டோபர் 15-ந் தேதி வரை டீஸ்டா செதல்வாட்டை போலீசார் கைது செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.