வெளிநாட்டு நிதி உதவி.. சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டுக்கு எதிராக சிபிஐ விசாரணை தொடக்கம்!
டெல்லி: வெளிநாட்டு நிதி உதவி பெற்றது தொடர்பாக சப்ராங் கம்யூனிகேசன்ஸ் என்.ஜி.ஓவை நடத்தி வரும் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டுக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணையை முறைப்படி தொடங்கி உள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த சப்ராங் கம்யூனிகேசன்ஸ் என்கிற என்.ஜி.ஓ. வெளிநாட்டில் இருந்து ரூ1 கோடி நிதி உதவி பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிதி உதவியைப் பெற்றுக் கொண்டு அரசுக்கு எதிராக முறைகேடாக சப்ராங் கம்யூனிகேசன்ஸ் பயன்படுத்தியது என்பது குஜராத் அரசின் புகார்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வந்தது. அதன் பின்னர் இந்த புகாரை விசாரிக்குமாறு சி.பி.ஐவசம் ஒப்படைத்தது உள்துறை.
இதனால் வெளிநாட்டு நிதி உதவி பெறுதல் சட்டத்தின் கீழ் சப்ராங் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது சி.பி.ஐ. தமது விசாரணையை முறைப்படி தொடங்கியுள்ளது.
டீஸ்டா செதல்வாட் அவரது கணவர் ஜாவேத் அனந்த் ஆகியோர் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட இருக்கின்றனர். முன்னதாக சப்ராங் என்.ஜி.ஓ. பெற்ற வெளிநாட்டு நிதி உதவி எவ்வளவு என ஆராயப்படும்.
பின்னர் இந்த பணம் எங்கிருந்து எப்படி வந்தது? எதற்காக அனுப்பி வைக்கப்பட்டது? எதற்காக செலவிடப்பட்டது? என பல்வேறு அம்சங்களையும் சி.பி.ஐ. ஆராய இருக்கிறது.