அரசு பங்களாவை காலி செய்ய பேயை ஏவினார் நிதிஷ்குமார்... லாலு மகன் பகீர் குற்றச்சாட்டு!
அரசு பங்களாவில் இருந்து காலி செய்வதற்காக பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் பேயை ஏவியதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.
பாட்னா : தம்மை அரசு பங்களாவிலிருந்து விரட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேய்களை ஏவிவிட்டதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு பின் பதவி இழந்தவர்கள் அவர்களுக்கான பங்களாவை விட்டு வெளியேறாவிட்டால் 15 மடங்கு வாடகை செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபரில் பீகார் அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
நீண்ட மாதங்களாக வெளியேற மறுத்திருந்த ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவரின் மகனும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக தேஜ் பிரதாப் யாதவ் கடந்த வாரத்தில் தனது பங்களாவை காலி செய்தார். அரசுப் பங்களாவை காலி செய்ததற்கான காரணத்தை மீடியாக்களிடம் கூறிய தேஜ் பிரதாப் யாதவ், தம்மை அந்த பங்களாவைவிட்டு விரட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், துணை முதல்வரும் பேய்களை ஏவியதாக கூறியுள்ளார்.
பேய்கள் தன்னை அச்சுறுத்துவதால் அவற்றிற்கு பயந்தே அரசு பங்களாவை காலி செய்ததாகவும் தேஜ் பிரதாப் தெரிவித்துள்ளார். கடந்த 2017 தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், க்கிய ஜனதா தளம் கூட்டணியோடு நிதிஷ்குமார் ஆட்சி அமைந்தது.
ஆனால் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, பாஜக கூட்டணியோடு நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியை நடத்தி வருகிறார். அரசு பங்களாவை காலி செய்தது குறித்து தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ள குற்றச்சாட்டை முதல்வர் அலுவலகம் மறுத்துள்ளது.