டிசம்பரில் கண்டிப்பாக தேஜாஸுக்கு எப்.ஓ.சி. அளிக்கப்படும்: ஏடிஏ தலைவர்
பெங்களூர்: தேஜாஸ் இலகுரக விமானத்தை இயக்கத் தேவையான இறுதி ஒப்புதல் சான்று வரும் டிசம்பர் மாதம் அளிக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏடிஏ இயக்குனர் பி.எஸ். பாலசுப்பிரமணியம் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
அனைத்து திட்டங்களும் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. தேஜாஸ் விமானத்திற்கு இறுதி ஒப்புதல் சான்று வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும். ஏலஹன்காவில் நடக்கும் விமான கண்காட்சியில் எல்.எஸ்.பி.-3, எல்.எஸ்.பி.-4 ரக விமானங்கள் ரசிகர்களை வெகுவாக கவரும். எஸ்பி-1 மற்றும் என்.பி-2 விமானங்கள் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன.
தேஜாஸில் உள்ள அனைத்து சிஸ்டம்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. என் மிஷனை நிறைவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2001ம் ஆண்டில் இருந்து விமானத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தேஜாஸை இயக்குவது தனி சந்தோஷம் என்று தற்போது விமானிகள் கூறுகிறார்கள்.
தேஜாஸின் செயல்திறனை மேலும் மேம்படுத்த உள்ளோம். சீரிஸ் ப்ரொடக்ஷனில் விமானத்தில் குண்டுகள், ஏவுகணைகளை ஏற்றிச் செல்லும் வசதி செய்ய உள்ளோம். முதல்கட்டமாக 20 தேஜாஸ் விமானங்கள் வரும் 2018-2019ம் ஆண்டில் விமானப்படையிடம் அளிக்கப்படும்.
விமான கண்காட்சி முடிந்த பிறகு தேஜாஸ் விமானம் பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதுவரை தேஜாஸ் விமானத்தை அனுபவம் உள்ள டெஸ்ட் விமானிகள் மட்டுமே இயக்கியுள்ளனர். இந்நிலையில் விமானம் இந்திய விமானப்படை விமானிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவர்கள் அதில் சில மாற்றங்களை செய்ய விரும்பினர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப விமானத்தில் மாற்றம் செய்து வருகிறோம் என்றார்.
தேஜாஸ் விமானத்திற்கு இறுதி ஒப்புதல் வழங்க காலதாமதமாகி இறுதியாக டிசம்பரில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.