தேஜாஸ் திட்டத்திற்கு இன்னும் ஒரு வெற்றி.. வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது பிவி 6!
பெங்களூரு: இந்தியாவின் இலகு ரக போர் விமானம், தேஜாஸ் திட்டத்திற்குப் புது உற்சாகமூட்டும் வெற்றி கிடைத்துள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட பிவி 6 (Prototype Vehicle 6), 2 சீட் கொண்ட விமானம் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
பெங்களூரில் உள்ள எச்ஏஎல் விமான நிலையத்தில் தனது சோதனை ஓட்டத்தை இது சனிக்கிழமை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த விமானத்தை குரூப் கேப்டன் விவர்த் சிங் செலுத்தினார். கோ பைலட்டாக குரூப் கேப்டன் அனூப் கபத்வால் செயல்பட்டார். இருவரும் தேசிய விமான சோதனை மையத்தைச் சேர்ந்த விமானிகள் ஆவர்.
இதுகுறித்து அடா எனப்படும் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியின் இயக்குநர் பி.எஸ். சுப்பிரமணியன் தட்ஸ்தமிழிடம் கூறுகையில், 35 நிமிடங்களுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. திட்டமிட்ட அனைத்து வேலைகளையும் திட்டமிட்டபடி விமானிகளால் செய்ய முடிந்தது. புதிய என்ஜினை முழு சக்தியுடன் பரீட்சித்துப் பார்த்தோம். அனைத்து விதமான நிலையிலும் என்ஜின் பரிசோதிக்கப்பட்டது. சோதனை முழுமையாக இருந்தது என்றார்.
பிவி 6 விமானம் அதிகபட்சம் 30,000 அடி வரை பறந்தது. அதன் வேகம் 0.7 மேக் ஆக இருந்தது. ஆங்கிள் ஆப் அட்டாக்கின் கோணம் 14 டிகிரி வரை இருந்தது. இது தேஜாஸ் விமானத்தின் 15வது "வேரியன்ட்" ஆகும். இதற்கு முன்பு TD1, TD2, PV1, PV2, PV3, PV5 (பயிற்சி), LSP1, LSP2, LSP3, LSP4, LSP5,LSP7, LSP8 and SP1 ஆகியவை பரிட்சீத்து பார்க்கப்பட்டுள்ளன.
மேலும் கடற்படைக்காக தயாரிக்கப்பட்டுள்ள NP-1 போர் விமானமும் தற்போது சோதனை நடவடிக்கைகளில் உள்ளது.
இதுகுறித்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் தலைவர் ஆர்.கே.தியாகி, தட்ஸ்தமிழுடன் டெல்லியிலிருந்து தொலைபேசியில் பேசுகையில், சனிக்கிழமை நடந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக இருந்தது. எங்களது குழுவினரின் மேலும் ஒரு சாதனையாகும் இது. தேஜாஸ் படைப்பு ஒவ்வொன்றும் நமது பிராண்ட் அம்பாசடராக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.
பிவி6 விமானத்தில் உள்ள அனைத்து கருவிகளும், சாதனங்களும் எதிர்பார்த்தது போலவே சிறப்பாக இயங்கியுள்ளதாக எச்ஏஎல் கூறியுள்ளது. பிவி 6 விமானமானது 2 இருக்கைகளைக் கொண்டதாகும். அது வானிலிருந்து வானில் உள்ள இலக்கையும், அதேபோல வானிலிருந்து தரையில் உள்ள இலக்கையும் தாக்கும் ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக் கூடி திறன் படைத்ததாகும். இதன் இறுதி வடிவத்திற்காக தற்போது இந்திய விமானப்படை காத்திருக்கிறது.
தியாகி மேலும் இதுகுறித்துக் கூறுகையில், டிவின் காக்பிட்டின் செயல்பாடுகளையும், அதன் அம்சங்களையும் எப்படி செயல்படுத்த முடிகிறது என்பதை பரிசோதித்துப் பார்க்க விரும்பினோம். இந்த சோதனை அடிப்படையில் தொடர்ந்து பல்வேறு ஆயுவுகளை மேற்கொண்டு பின்னர் இது இறுதிப்படுத்தப்படும். மேலும் சில சோதனை இயக்கமும் மேற்கொள்ளப்படும் என்றார்.
கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் முறையாக தேஜாஸ் விமானம் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. அதன் பின்னர் இதுவரை மொத்தம் 2772 சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மொத்தம் 1800 மணி நேரம் விமானங்கள் பறந்துள்ளன. இதில் எந்த சோதனை ஓட்டத்திலும் விபத்தோ அல்லது சிக்கலோ ஏற்பட்டதில்லை.
தேஜாஸ் திட்டத்தை எச்ஏஎல், அடா மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. திட்டம் தாமதமானாலும் கூட திட்டத்திற்கு நாளுக்கு நாள் வெற்றிகள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிவி 6 விமானத்தில் புதிததாக GE-404 IM20 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதுதவிர புதிய தகவல் தடர்பு சாதனமும், ரேடார், இடபிள்யூ சென்சார்கள், வழிகாட்டும் கருவிகள் (விமானம் தானாகவே தரையிறங்க இது உதவும்) ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.