தேஜ்பாலுக்கு ஜாமீன் கிடைத்தாலும் டெல்லியில் நுழைய முடியாது
டெல்லி: பாலியல் பலாத்கார முயற்சி வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் தெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் டெல்லியில் நுழைய முடியாது.
கோவாவில் ஹோட்டல் ஒன்றில் நடந்த பார்ட்டியின்போது, தன்னுடன் பணியாற்றும் பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல புலனாய்வு இதழான தெஹல்காவின் ஆசிரியராக இருந்த தருண் தேஜ்பால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் கோவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது வாதாடிய வக்கீல் ஹரிஷ் சால்வே, தேஜ்பால் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று குற்றம்சாட்டி கீழ் கோர்ட்டுகளில் ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது.
வழக்கில் சம்மந்தப்பட்ட சாட்சிகள் டெல்லியில்தான் உள்ளளனர். எனவே தேஜ்பாலுக்கு ஜாமீன் அளித்தாலும் அவர் டெல்லி செல்லமாட்டார் என்று உறுதியளிக்க தயார் என்றார். இருப்பினும் உச்சநீதிமன்றம் தேஜ்பாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததுடன் இதுகுறித்து பதில் அளிக்க கோவா மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க அந்த நோட்டீசில் உத்தரவிடப்பட்டுள்ளது. கோவா அரசு ஆட்சேபனை தெரிவிக்காமல் தேஜ்பாலுக்கு ஜாமீன் அளித்தாலும் அவரால் டெல்லிக்குள் வரமுடியாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.