லோக்சபாவில் தெலுங்கானா மசோதா இன்று தாக்கல்- எம்.பி.க்கள் தற்கொலை மிரட்டல்!
டெல்லி: லோக்சபாவில் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றவிடாமல் சபையிலே தற்கொலை செய்வோம் என்று சீமாந்திரா எம்.பிக்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
லோக்சபாவில் தெலுங்கானா தனி மாநில மசோதா திட்டமிட்டபடி இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே பட்ஜெட்டிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவித்த பின் இம்மசோதா தாக்கல் செய்யப்படும்.
தெலுங்கானா மசோதாவை பாரதிய ஜனதா கட்சியும் ஆதரிக்க தயார் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஆனால் சீமாந்திரா பகுதி எம்.பிக்களோ தற்கொலை செய்தேனும் மசோதாவை நிறைவேற்றவிடமாட்டோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இம்மசோதாவை உள்துறை அமைச்சரான சுஷில்குமார் ஷிண்டே தாக்கல் செய்யும்போது அவரை சீமாந்திரா எம்.பி.க்கள் தாக்க முற்படலாம் என சந்தேகிப்பதால் அவரை சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் என தெரிகிறது.
இதனிடையே இம்மசோதாவை எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் நிறைவேற்றுவது குறித்து பிரதமர் மன்மோகன்சிங், மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.