செருப்பாலேயே என்னை அடிங்க.. வாங்கிக்கறேன்.. தெலுங்கானாவை கலக்கும் வேட்பாளர்
ஒரு செருப்பு கொடுத்து தெலங்கானா வேட்பாளர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
Recommended Video
தெலங்கானா: இப்படி கூட இருப்பாங்களா? இப்படி கூட பேசுவாங்களா? இப்படி கூட கேட்பாங்களா? என்றுதான் தெலங்கானா மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாசம் 7-ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, எம்.ஐ.எம் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் ஒரு அணியாகவும் களத்தில் உள்ளன.
ரெண்டு கட்சிகளுக்கும் போட்டா போட்டி போய் கொண்டிருக்கிறது. மக்களை கவர்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துவருகிறார்கள்.
கட்டிங், ஷேவிங்
2 மாசத்துக்கு முன்னாடி ஒரு வேட்பாளர், ரோட்ல போய்ட்டு இருந்த ஒரு பாட்டியை விடல. "உங்களுக்கெல்லாம் பென்ஷன் ஒழுங்கா கிடைக்குதா, இல்லாட்டி என்கிட்ட சொல்லுங்க" என்றார். இன்னொரு வேட்பாளர் பெண்கள் ஓட்டு பெற, அவர்கள் வீட்டு கிச்சனுக்குள்ளேயே நுழைந்து கரண்டி பிடித்து சமைத்து போட ஆரம்பித்துவிட்டார். ஆண்கள் வாக்குகளை அள்ள, அவர்களுக்கு கட்டிங், ஷேவிங் என இறங்கி விட்டார்கள்.
ஹனுமந்துலு
இப்போது இன்னொரு வேட்பாளர் வேற லெவலுக்கு போய்விட்டார். இப்படி ஒரு லெவலை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள கொரட்டாலா சட்டமன்ற தொகுதியில் இவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட போகிறாராம். இவர் பெயர் ஆக்குல ஹனுமந்துலு. மெட்டுபள்ளி நகரில் பிரச்சாரத்துக்கு வந்தார். வரும்போது, ஒரு பெட்டியும் சில பேப்பர்களும் கொண்டு வந்தார்.
பெட்டி நிறைய செருப்புகள்
ஓட்டு கேட்க வந்தவர் எதுவுமே பேசாமல், வாக்காளர்களுக்கு கையில் இருந்த நகலை எடுத்து தர ஆரம்பித்தார். பிறகு சூட்கேஸை ஓபன் செய்தார். அதிலிருந்து வேறு என்னமோ தரப் போகிறார் என்று எல்லாரும் எட்டி பார்த்தால் உள்ளே பெட்டி நிறைய செருப்புகள் இருந்தன. அந்த செருப்பை எடுத்து எல்லோருக்கும் ஒன்று கொடுத்தார்.
செருப்பால் அடியுங்கள்
ஒன்றும் புரியாமல் அப்பகுதி மக்களும் அந்த பேப்பரை வாங்கி படித்தார்கள். அதில், "தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆகிய பின், நான் சரியான முறையில் மக்களுக்கு சேவை செய்யத் தவறினால், நான் இப்போது கொடுக்கும் இதே செருப்பால் என்னை அடித்து, என்னை மக்களுக்கு சேவை செய்ய வையுங்கள். என் மீது அதிருப்தி ஏற்பட்டால் கொடுக்கும் ராஜினாமா கடிதத்தை பயன்படுத்தி நான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்யுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.
|
வித்தியாசமான முறை
இப்படி வித்தியாசமான வாக்கு சேகரிப்பை கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர். புதுமையான முறையில் ஹனுமந்துலு நடத்திய வாக்கு சேகரிப்பு குறித்து தொகுதி மக்கள் தங்களுக்குள் சிரித்து கொண்டனர். செருப்பை கொடுத்து ஓட்டு கேட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.