ஏழு கொண்டல வாடா.. கோவிந்தா.. கோவிந்தா.. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்திரசேகர் ராவ்!
Recommended Video
திருப்பதி: தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் திருப்பதி எழுமலையான் கோவிலில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சாமி தரிசனம் செய்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியானது.
இதில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவின் தெலுங்கான ராஷ்டிரிய சமீதி கட்சி 9 இடங்களை கைப்பற்றியுள்ளது. 17 தொகுதிகளில் 16 இடங்களை கைப்பற்றிவிடுவோம் என கணக்கு போட்டிருந்தார் சந்திரசேகர் ராவ்.
கனவை தகர்த்த பாஜக
ஆனால் 9 இடங்களை மட்டுமே அவரால் வெல்ல முடிந்தது. 16 இடங்களை கைப்பற்றினால் மூன்றாவது அணி அமைக்கலாம் என்று கனவு கண்ட நிலையில் பாஜக தனிப்பெரும்பை பெற்று அந்த கனவை தகர்த்தது.
குடும்பத்துடன் தரிசனம்
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று திருப்பதி சென்றார். திருமலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய அவர் இன்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
தேவஸ்தான அதிகாரிகள்
முன்னதாக கோவில் மகாதுவாரம் (முன் வாசல்) அருகே தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழு தலைவர் சுதாகர் யாதவ் ,தலைமையில் அர்ச்சகர்கள் இஸ்தி்காபால் மரியாதையுடன் சந்திரசேகரராவை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தனர்.
தீர்த்த பிரசாதங்கள்
ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைக்கப்பட்டு தீர்த்த பிரசாதங்களும் அவருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து சந்திரகிரி எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி திருப்பதி அடுத்த தும்மலகுண்டாவில் கட்டிய கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்கு சென்ற சந்திரசேகரராவ் அங்கும் சுவாமி தரிசனம் செய்தார்.
தேர்தல் முடிவுக்கு பிறகு
மதியம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டு செல்கிறார். தேர்தல் முடிவுகள் வெளியாகி தெலுங்கானா ராஷ்டிரிய சமீதிக்கு கணிசமான இடங்கள் கிடைத்த நிலையில் சந்திர சேகர்ராவ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.