தெலுங்கானா கிடைத்ததால் ஏழுமலையானுக்கு 5 கோடியில் நகை காணிக்கை.. வழங்கினார் கே.சி.ஆர்.!
தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டதால் 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்களை அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் திருப்பதியில் காணிக்கையாக செலுத்தினார்.
திருப்பதி: திருப்பதி கோயிலுக்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் இன்று காணிக்கையாக வழங்கினார்.
தெலுங்கானா மாநிலம் உருவானால் திருப்பதிக்கு காணிக்கை செலுத்துவதாக அம்மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் வேண்டிக் கொண்டாராம். அந்தக் கோரிக்கையை திருப்பதி ஏழுமலையான் நிறைவேற்றி வைத்துவிட்டதற்கு நன்றி செலுத்தும் வகையில் அம்மாநில முதல்வர் தங்க ஆபரணங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
முதல்வராக பதவி ஏற்று முதல்முறையாக திருப்பதி வரும் சந்திர சேகர் ராவ், தனது குடும்பத்தாருடன் தனி விமானத்தில் தங்க ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு வந்தார். இதனையடுத்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டன.
குடும்பத்துடன் தரிசனம்
குடும்பத்துடன் திருப்பதிக்கு வந்த சந்திர சேகர் ராவ்விற்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் பத்மாவதி தாயார் கோயிலுக்கும், பின்னர் வெங்கஸ்வரா கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்தார்.
காணிக்கை பூஜை
பின்னர், காணிக்கையாக செலுத்துவதற்கு கொண்டு வரப்பட்ட கழுத்து மாலை உள்ளிட்ட ஆபரணங்களுக்கு பூஜை செய்யப்பட்டன. பின்னர் அந்த நகைகளை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிகளிடம் சந்திர சேகர் ராவ் ஒப்படைத்தார்.
5.6 கோடி ஆபரணம்
சந்திர சேகர் ராவ் காணிக்கை செலுத்திய தங்க ஆபரணங்களின் மதிப்பு சுமார் 5.5 கோடி ரூபாயாகும். 3 கோடி ரூபாய் மதிப்பில் தங்க நெக்லஸ்சு மற்றும் 4 கிலோ அளவில் மற்றொரு செயின் என தங்க ஆபரணங்கள் திருப்பதியில் காணிக்கையாக செலுத்தப்பட்டன.
தங்க மீசை
திருப்பதி கோயிலுக்கு இன்று செலுத்திய காணிக்கை போன்றே அடுத்த வார இறுதியில் குரவியில் உள்ள வீரபத்ர சாமி கோயிலுக்கு தங்க மீசையை காணிக்கையாக சந்திரசேகர் ராவ் அளிக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்க மூக்தி
முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன், வாரங்கல் நகரில் உள்ள பத்திரகாளி கோயிலுக்கு ரூ.3.5 கோடி ரூபாய் மதிப்பில் 12 கிலோ தங்க நகைகளை காணிக்கையாகவும், விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலுக்கு அம்மனுக்கு தங்கமூக்குத்தியும் முதல்வர் சந்திரசேகர் ராவ் காணிக்கையாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.