தெலுங்கானா முதல்வருடன் அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை... ஸ்டாலின் பேட்டி
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத 3-ஆவது அணி அமைப்பது குறித்து இன்று ஸ்டாலினை சந்திக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.
சென்னை: அரசியல் சூழ்நிலைகள் குறித்து தெலுங்கானா முதல்வருடன் ஆலோசனை நடத்தியதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து 3-ஆவது அணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முயற்சித்து வருகிறார். அதன் முதல் படியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து அவரிடம் ஆதரவு கேட்டார்.
அவரும் ஆதரிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி 3-ஆவது அணி குறித்து ஆதரவு கேட்டிருந்தார்.
சென்னை வருகை
இந்நிலையில் 3-ஆவது அணி அமைப்பதில் தீவிரம் காட்டப்படுகிறது. இதுபோல் முன்னாள் பிரதமர் தேவ கௌடாவையும் சந்தித்து சந்திரசேகர ராவ் ஆதரவு கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பிரதான கட்சியாக திகழும் திமுகவின் ஆதரவை பெறுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு இன்று மதியம் சந்திரசேகர ராவ் வந்தார்.
மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அதைத் தொடர்ந்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து 3-ஆவது அணி குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஸ்டாலின் பேட்டி
இந்த சந்திப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலினும் சந்திரசேகர ராவும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மு.க.ஸ்டாலின் கூறுகையில், அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுதல், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி குறித்து விவாதித்தோம்.
அரசியலை அணுகுவது
ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எதிர்வரும் அரசியல் சூழலை எப்படி அணுகுவது என்பது குறித்து விவாதித்தோம் என்றார் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசுகையில் 3-ஆவது அணி, 4-ஆவது அணியெல்லாம் அமைக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை . நாங்கள் 3-ஆவது அணி அல்ல. செய்தியாளர்கள்தான் இதுபோன்ற வதந்தியை பரப்புகின்றனர் என்றார்.